தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் டாலருக்கு கடத்தப்பட்ட ருவாண்டா பெண் கொல்கத்தாவில் மீட்பு
சென்னை: தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர்.
வருங்கால கணவரின் உதவி:
இது குறித்து அந்த ருவாண்டா பெண்ணின், அமெரிக்காவில் வசிக்கும் வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது.
3 குழுக்கள் அமைப்பு:
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மேரி கிரேஸ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நுண் உயிரியல் பயின்று வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு விசாரணைக்காக 3 குழுக்கள் அனுப்பட்டது.
கொல்கத்தாவில் மீட்பு:
மேலும், விசாரணையில் ஈடுபட்ட டெல்லி போலீசார் கடத்தப்பட்ட பெண் பயன்படுத்திய தொலைபேசி மூலம் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் அவர் மூன்று வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இறுதியில் கொல்கத்தா நகரில் இருந்து அந்த பெண்ணை டெல்லி போலீசார் மீட்டனர்.
ஏன் கடத்தல்:
அந்த பெண்ணுடன் சேர்த்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்று விட்டனர். விசாரணையில், கடத்தப்பட்ட அந்த பெண் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் மாற்றி இருக்க வைக்கப்பட்டதாக தெரியவந்தது. அவர் கடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை.