மான்கறி விருந்து சாப்பிட்டவர்களுக்கு, ”மாமியார்” வீட்டு விருந்து – 2 பேர் வனத்துறையினரால் கைது
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான் கறி சமைத்த இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், கோபி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக, வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரி கம்மநாயக்கர் உள்ளிட்ட வன அலுவலர்கள் சூரம்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மான் கறி சாப்பாடு:
அப்போது, அந்தப் பகுதியில் கெம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாறன் மகன் மணி , சூரம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாறசாமி மகன் கணபதி , வினோபா நகர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் செல்வன் , ராஜன் மகன் அய்யப்பன் ஆகியோர் மான் கறி சமைத்துக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கியுடன் ஓட்டம்:
ரோந்து சென்ற வனத்துறையினரை கண்டவுடன் செல்வன் மற்றும் அய்யப்பன் இருவரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டனர். மணி, கணபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தேடும் வனத்துறையினர்:
இவர்களிடம் இருந்து 3 அரிவாள், கத்திகள், துப்பாக்கி குண்டுகள், மான் கறி ஆகியவை கைப்பற்றபட்டது. தப்பி ஓடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.