அதிமுகவுக்கு சசிகலா தலைமை தாங்க கூடாது.. உண்ணா விரதத்தில் குதித்த சட்ட பஞ்சாயத்து இயக்கம்
சசிகலா அதிமுக மற்றும் ஆட்சிக்கு தலைமையேற்பதை எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளது.
சென்னை: அதிமுகவிற்கும், ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 நாள் உண்ணாவிரதம் நடைபெறும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த உண்ணாவிரதம் 27ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் 29ம் தேதி வரை, சென்னை தி.நகரில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாமியாக பல்லாயிரம் கோடி சொத்துக்களை சேர்த்தவர் என்பதால் அவரை ஆளும் கட்சி மற்றும் ஆட்சிக்கு தலைமை ஏற்பதை எதிர்ப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தனது வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேசமயம், ஜெயலலிதாவின் தோழியும் அக்கட்சியினரால் சின்னம்மா என்றழைக்கப்படும் சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என அக்கட்சியினர் பலரும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்த உள்ளது.