பள்ளி பேருந்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமி - இழப்பீடு கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி பேருந்தில் மாணவி கை துண்டிக்கப்பட்டதையடுத்து அதற்கு இழப்பீடு வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.
பேரணாம்பட்டு அருகே சாத்கர் கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்தவர் வேதாச்சலம். அவரது மகள் தாரகை. பல்லலகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். தினமும் மாணவி பள்ளி பேருந்தில் சென்று வந்தாள். கடந்த மாதம் 20 ஆம் தேதி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மாணவி தாரகை பள்ளி பேருந்தில் அமர்ந்திருந்தாள். பேருந்து ஓடும்போது மாணவி கையை வெளியே நீட்டியதாக தெரிகிறது.
அதில் மாணவியின் கை நசுங்கி படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து டிரைவர் சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுள்ளது. சிகிச்சையில் மாணவியின் வலது கை துண்டிக்கப்பட்டு வீடு திரும்பினாள்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கை துண்டிக்கப்பட்டதால் மாணவிக்கு உரிய இழப்பீடு கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளிக்குள் மாணவர்களை செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்தியதால் பள்ளி மாணவர்கள் அருகில் இருந்த தேவாலய வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மேல்பட்டி போலீசார் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.