பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் 1லட்சம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்கள், பிரபலகோவில்களில் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிசம்பர் 6) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 4 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர் கள், 19 துணை கமிஷனர்கள் தலை மையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களுக்குவரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள் நவீன கருவிகள் மூலமாக சோதனை செய்யப்படுகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல விமானநிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிச. 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து இரு பிரிவினருக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிச.6-ஆம் தேதியன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.