சுபாஷ் பண்ணையார் உள்பட 9 பேர் விடுதலை எதிரொலி - தென் மாவட்டங்களில் போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் மனைவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் பண்ணையார் உள்பட 9 பேரை தூத்துக்குடி கோர்ட் விடுதலை செய்துள்ளதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், மூலக்கரையை சேர்ந்த பண்ணையார் சுப்பிரமணிய நாடாருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கடந்த 1990ம் ஆண்டு தகராறு நடந்தது. இதில் தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் புல்லாவெளி கிராம மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இதன் எதிரொலியாக பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் பகை உருவானது. 24-1-93ல் பண்ணையார் மகன் அசுபதி பண்ணையாரை பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். இதை தொடர்ந்து 21.4.93ல் பசுபதி பாண்டியனை கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவரது நண்பர் பொன் இசக்கி பலியானார். இதில் பசுபதி பாண்டியன் படுகாயத்துடன் உயிர் தப்பினார். தொடர்ந்து 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 7-4-2006ல் பசுபதி பாண்டியன் தனது மனைவி ஜெசிந்தாவுடன் தூத்துக்குடிக்கு காரில் சென்ற போது அவர்களை மறித்து அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவரது மனைவி ஜெசிந்தா பலியானார். இது தொடர்பாக சுபாஷ் பண்ணையார் உள்பட 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு தூத்துககுடி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் இதில் சுபாஷ் பண்ணையார் உள்பட 9 பேரையும் விடுதலை செய்து அறிவித்தார் நீதிபதி பால் துரை. இதனால் தென் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுவதால் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications