வைரமுத்துவின் தமிழாற்றுப்படை- தொல்காப்பியர் கட்டுரை அரங்கேற்றம்- சீமான் பங்கேற்பு
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை, தொல்காப்பியர் கட்டுரை அரங்கேற்றத்தில் சீமான் பங்கேற்கிறார்.
சென்னை: தமிழாற்றுப்படையில் வைரமுத்து எழுதிய கட்டுரை அரங்கேற்ற விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் அறிக்கையில் கூறுகையில், தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.
இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆண்டாள், மறைமலையடிகள் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து, 16-ம் ஆளுமையாக, தொல்காப்பியர் குறித்த கட்டுரையை அரங்கேற்றவிருக்கிறார். தமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதான் நிலைபெறுகிறது என்றும், அது வடமொழிச் சார்பான வழிநூல் அல்ல தமிழில் தோன்றிய முதனூல் என்றும் தன் ஆய்வுக் கட்டுரையில் ஆதாரங்களோடு நிறுவியிருப்பதாகக் கவிஞர் வைரமுத்து சொல்கிறார்.
இன்று மே-2, புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அடையாறு சிவாஜி நினைவு மண்டபத்திற்கு அடுத்துள்ள இராஜரத்தினம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை ஏற்கிறார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக உரை ஆற்றுகிறார்.
ஏற்பாடு: வெற்றித் தமிழர்பேரவை
இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையாளராகப் பங்கேற்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.