சிவாஜி சிலை இடமாற்றம்: ரசிகர்கள் அமைதி காக்க ராம்குமார், பிரபு வேண்டுகோள்
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாக அவரது மகன்கள் பிரபு, ராம்குமார் தெரிவித்துள்ளார்.
சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் ராம்குமார், பிரபுவின் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை கடற்கரை காமராஜ் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே விட்டிருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும், இது சம்பந்தமாக எந்தவித போராட்டமோ, ஆர்ப்பட்டமோ தற்போது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதுதொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். அதுவரை அமைதி காக்கும்படியும், எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
சென்னையில் காந்தி சிலை எதிரே, காமராஜர் சாலை-டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு 2006-ம் ஆண்டு சிலை வைத்தது.
இந்த சிலை, காந்தி சிலையை மறைப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், எனவே சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி பி.என்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.