வைக்கோல் விலை அதிகரிப்பு : மழை இல்லாததால் தென்மாவட்டங்களில் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு
மழை இல்லாததால் தென்மாவட்டங்களில் கால்நடை தீவனங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வைக்கோல் விலை அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எந்தவித சாகுபடியும் சரியாக நடக்கவில்லை. போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இரு மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு சமீபத்தில் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் கால்நடை வளர்ப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறண்டு போன பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் விற்பனைக்கு கொடுப்பர். ஆனால் கடந்த ஆண்டு விவசாயிகள் நாற்று நடவே முன்வராத நிலையில் வைக்கோலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல்லை, தூத்துக்குடியில் வைக்கோலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெல்லை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டு ரூபாய் 200 வரை விற்கப்படுவதால் பலர் வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் வைக்கோலை அறுத்து கட்டி கொடுக்கும் ஆள்களுக்கு கூலி கொடுக்க வேண்டியிருப்பதால் அதற்கும் சேர்ந்து விவசாயிகள் பணம் கேட்பதால் வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லையை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் சிலர் கூறுகையில், தற்போது வயல்களில் அறுவடை முடிந்தும் வைக்கோல் விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் கால்நடைகள் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications