சிவகாசியில் பட்டாசு ஆலைகள் 10வது நாளாக ஸ்டிரைக் - ரூ. 100 கோடி பாதிப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் 10வது நாளாக தொடர்கிறது.
Recommended Video

சிவகாசி : சிவகாசியில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று பத்தாவது நாளை எட்டி உள்ளது. இதனால் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வாய்ப்பு இருப்பதால் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கடந்த ஒன்பது நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் இன்று பத்தாவது நாளாக தொடர்கிறது. இதனால் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்டாசு வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிவகாசி நகர மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டால், இந்த தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக வேலை இழக்க நேரிடும் என்று பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சிவகாசியில் அனைத்து அரசியல் கட்சி சார்பாக ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய மாநில அரசுகளிடம் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உள்ளனர். பத்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதில் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications