10ம் வகுப்பு... மாநில அளவில் 2 இடங்களைப் பிடித்த நெல்லை மாற்று திறனாளி மாணவர்கள்
நெல்லை: பத்தாம் வகுப்பு தேர்வில் பாளை பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த கல்வி ஆண்டு முதல் பார்வையற்ற மாணவர்களுக்கும் மாநில அளவில் தனி ரேங்க் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவர் செய்துங்கநல்லூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 500க்கு 489 மதிப்பெண் எடுத்து மாநில அளவில முதலிடம் வந்துள்ளார். இவர் தமிழ்-97, ஆங்கிலம்-95, கணிதம்-100, சமூக அறிவியல்-99, அறிவியல்-100 என எடுத்துள்ளார். இவரது தந்தை கோவர்த்தனன் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். தாய் சமுத்திரகனி வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.
இது குறித்து மாணவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நன்கு ஊக்கம் அளித்தனர். இதனால் தொடர்ந்து இதே பள்ளியில் படிப்பேன். பள்ளி இறுதி தேர்விலும் இதே இடத்தை தக்க வைப்பேன்' என்றார்.
இதேபோல், இதே பள்ளியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்கபுரத்தை சேர்ந்த மாணவி ராணி 470 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்-92, ஆங்கிலம்-86, கணிதம்-93, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 என எடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி ராணி கூறுகையில், ‘நான் முதலில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள பள்ளியில் பயின்றேன். எனக்கு பார்வை திறன் குறைபாடாக இருப்பதை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து படிக்காமல் படிப்பை நிறுத்தினேன். பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி குறித்து கேள்வி பட்டதும் இங்கு மீண்டும் சேர்ந்து 10ம் வகுப்பு படித்தேன். மாநில அளவில் இரண்டாம் இடம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை முருகேசன் தோட்ட தொழில் செய்து வருகிறார். எனது சகோதரர் பாலகிருஷ்ணன் கேட்டரிங் படித்து விட்டு வேலை செய்து வருகிறார். நான் தொடர்ந்து உயர் கல்வி பயின்று ஆசிரியராக பணியாற்றி விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.