நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: நடிகர் சங்கம் அறிக்கை !
சென்னை: தென் இந்திய நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நடிகர் சங்க தேர்தல் முடிந்தவுடன் பழைய நிர்வாகிகள், கணக்குகளை புதிய நிர்வாகத்தினரிடம் சட்டப்படி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள், சரத்குமார் ஊடகங்கள் மூலம் நடிகர் சங்க கணக்குகள் 7 நாட்களிலும், அறக்கட்டளை கணக்குகள் 15 நாட்களிலும் ஒப்படைப்பேன் என்றார். நாங்கள் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆனால் கணக்குகள் வரவில்லை.

பல நினைவூட்டல் கடிதங்களுக்கு பின் நவம்பர் மாதம் 25-ந்தேதி, நடிகர் சங்கத்தின் ஒரு வருட கணக்கு (2014-2015) மட்டும் வந்தது. ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 6 மாத கணக்குகள் இன்னும் வரவில்லை. அவர்கள் தந்த ஒரு வருட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அத்தோடு, அறக்கட்டளையை பொறுத்தவரை பல வருடங்களாக சரத்குமார், ராதாரவி இருவரும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். அறக்கட்டளைக்கு 2013-2014, 2014-2015 மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 6 மாதம் என 2லு வருட கணக்குகள் தர வேண்டியுள்ளது.
முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டியது பொதுக்குழுவின் நோக்கம். கணக்கை ஒப்படைத்த 21 நாளில் இருந்து பொதுக்குழுவை கூட்ட நடிகர் சங்கம் தயாராக இருக்கிறது.
இவர்களின் பொறுப்பற்ற செயலால் வருமான வரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கமும், அறக்கட்டளையும் சட்டப்படி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications