சுள்ளுன்னு மண்டையைப் பிளக்கும் வெயில்.. நெல்லை மக்களைத் துரத்தும் தொல்லை!
நெல்லை: நெல்லையில் வெயில் மீண்டும் சதத்தை எட்டி சுருட்டி வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. காற்று சீசன் நீடித்தாலும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.

கடந்த ஓரு வாரத்திற்கு முன்னர் வெயில் 102 டிகிரியாக பதிவானது. பின்னர் 100 டிகிரிக்குள் குறைந்த வெயில் கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் கொளுத்த துவங்கியுள்ளது. பகலில் காற்று அதிகமாக இருந்தாலும் இரவில் புழுக்கம் காணப்படுகிறது.
வெயில் தாக்கத்தால் குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைந்திருந்தது.
தமிழகத்தில் சில பகுதிகளில் வெயில் அடித்தாலும் அவ்வப்போது வெப்ப சலனத்தால் பல பகுதிகளில் மழை பெய்து குளிர்வித்தது. நெல்லை மாவட்டத்தில் வெப்ப சலன மழையும் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications