சென்னை: ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் ஐ.நா.அலுவலகத்தை முற்றுக்கையிட்ட மாணவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐ. நா மன்றத்தில் அமெரிக்கா முன் வைத்துள்ள தீர்மானத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமெரிக்கா முன் மொழிந்துள்ள அயோக்கியத்தனமான அத் தீர்மானத்தை ஐ. நா மன்றம் நிராகரிக்கக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நேற்று மாணவர்கள் மனு அளிக்க சென்றனர்.
அப்போது, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமலும், மாணவர்களை சந்திக்க மறுத்து புறக்கணித்த ஐ. நா அலுவலக அதிகாரிகளின் செயலைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அலுவலகத்தைப் பூட்டி முற்றுகையிட்டனர்.
மாணவர்களின் இப் போராட்டம் குறித்து அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் தடுப்புக் காவலில் கைது செய்து நேற்று மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பின்னர் நேற்று மாலை அவசர அவசரமாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது செய்து 108, 447, 438, 503(2) ஆகிய பிரிவுகளின் கீழ் பிணையில் வெளிவர முடியாதபடிக்கு வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு.
நீதி கேட்டு போராடும் மாணவர்களை மீது அச்சுறுத்தும் வகையில் கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்த தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாகவும், மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம் , நீதி காணாமல் ஓயமாட்டோம் என்றும் தமிழக மாணவர் முன்னணி தெரிவித்துள்ளது.