ப்ளஸ் 1 படிக்க அரசு பள்ளிகளில் இடமில்லை - திண்டாடும் மாணவர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ப்ளஸ் ஒன் வகுப்பிற்கு விரும்பிய பாடத்தில் சேர இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு 10, பிளஸ்டூ தேர்வுகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும் மாநில ரேங்க் பெற்று சாதனை படைத்தனர். இந்த தேர்ச்சி காரணமாக உயர் கல்விக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக பிளஸ் 1 படிப்பதற்கு பல பள்ளிகளில் இடம் இல்லை.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த உடனே பல பள்ளிகளில் சேர்க்கை முடிந்து விட்டது. தனியார் பள்ளிகளை பொருத்தவரை 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை மட்டும் சேர்த்து கொண்டு மற்றவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் தங்கள் விரும்பிய பாடம் கிடைக்குமா என்று சந்தேகத்துடன் பல இடங்களுக்கும் அழைந்து வருகின்றனர்.
வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் பல மாணவிகள் திண்டாடி வருகின்றனர்.
பலர் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் என்றும், விரும்பிய பாடம கிடைக்க வேண்டும் என்று தவியாய் தவித்து வருகின்றனர். இவர்கள் நலன் கருதி அரசு ஆண்டு தோறும் தரம் உயரும் பள்ளிகளின் பட்டியலை காலதாமதமின்றி அறிவிக்க வேண்டும் என பெற்றோரே ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
எந்த மாவட்டத்தில் எந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன என்பது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை கல்வி துறை இப்போதே வெளியிட வேண்டும். அப்போதுதான் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவ, மாணவிகள் உடனடியாக அங்கு சேர்ந்து பயில வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.