இதை விட்டா அதிமுக அம்மாவுக்கு வேற வழியே இல்லை.. அதான் உண்மை!
சென்னை: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அம்மா கட்சி அறிவித்திருப்பது வெறும் சம்பிரதாய அறிவிப்புதான். உண்மையில் ஆதரவு அளித்தே ஆக வேண்டிய பெரும் கட்டாயத்தில் அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
ஆதரவு தராவிட்டால் நடப்பதே வேறு என்பதை அக்கட்சியினர் முழுமையாக உணர்ந்து, பயந்து போய்தான்தான ஆதரவு தருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இவருக்கு அதிமுக அம்மா கட்சி ஆதரவு தரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். சசிகலாவும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தாண்டி யோசிக்க முடியாதே
இது வெறும் சம்பிரதாய அறிவிப்புதான். இதைத்தான் அவர்கள் அறிவித்தாக வேண்டும், அறிவிக்க முடியும், இதைத் தாண்டி யோசிக்கக் கூட முடியாது என்பதே நிதர்சனம்.
ஒருவர் கூட விடாமல்
அதிமுக அம்மா அணியிடம் பெரும்பாலான எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் உள்ளனர். எனவே இவர்களின் வாக்கு பாஜகவுக்கு மிக மிக முக்கியம். எனவேதான் அது அரும்பாடுபட்டு அதிமுகவின் எந்த ஒரு அணியையும் விட்டு விடாமல் சில பல வேலைகளைப் பார்த்து பத்திரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எவ்வளவு வேலைகள்
இந்த ஒரே காரணத்திற்காகத்தான் ஜெயலலிதா மறைந்த தினத்திலிருந்து வெங்கையா நாயுடு மூலமாக அது தொடர்ந்து அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளது.
3 பிரிவுகளையும்
அதிமுகவின் 3 பிரிவுகளும் அதாவது எடப்பாடி, சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியவை பாஜகவை ஆதரித்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் கொண்டு வந்து வைத்துள்ளது. அதற்காக அது பட்ட பாட்டை பாஜகவை விட தமிழக மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
அடுத்து ஓபிஎஸ்
இந்த நிலையில் தற்போது எடப்பாடி அரசு தனது ஆதரவை நேற்று அறிவித்து விட்டது. அடுத்து ஓபிஎஸ் அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதாவது ஒட்டுமொத்த அதிமுகவினரும் பாஜக வேட்பாளரை அறிவிக்கப் போகிறார்கள்... அறிவிக்குமாறு வைக்கப்பட்டுளளனர்!