பிடிச்சா வச்சுக்குவீங்க, பிடிக்காட்டி தூக்கி எறிந்து விடுவீர்களா.. முல்லைவேந்தன் ஆவேசம்
சென்னை: உங்களுக்கு பிடித்தால் கட்சியில் வைத்து கொள்வீர்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுவீர்கள். எங்கள் மீது புகார் கூறியவர்கள் நன்றாக கட்சி வேலை பார்த்து இருக்க வேண்டியது தானே? அவர்கள் நன்றாக வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு குறைவான ஓட்டு கிடைக்குமா? எண்ணிப் பாருங்கள். கட்சியில் வேலை செய்த எங்களை நீக்கிவிட்டு வேலை பார்க்காதவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கேட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுகவை நிர்வாக ரீதியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோஷ்டிப் பூசல்களைக் களைந்து, மு.க.அழகிரி ஆதரவாளர்களைத் தூக்கியும், மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று அதிரடியாக 33 பேரை கட்சியிலிருந்து திமுக சஸ்பெண்ட் செய்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பழனி மாணிக்கம், முல்லைவேந்தன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
தங்களதை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது குறித்து இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பழனிமாணிக்கம் பட்டும் படாமல் பதிலளித்துள்ளார். அதேசமயம், முல்லைவேந்தன் கோபம் காட்டியுள்ளார். கே.பி.ராமலிங்கமோ, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
முல்லைவேந்தன் கூறுகையில், 'கட்சி தலைமையிடம் இருந்து என்னை நீக்கியதாக கூறப்பட்ட விளக்க நோட்டீஸ் இதுவரை வரவில்லை. வந்தவுடன் பதில் அளிப்பேன். கட்சி வேட்பாளர் தோற்றதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறுகிறார்கள். என் மீது புகார் கூறி உள்ள வேட்பாளர், அவரது வார்டில் 74 ஓட்டு தானே வாங்கி உள்ளார். அவரது வார்டில் அவருக்கு அதிக வாக்காளர்கள் ஓட்டு போட வரவில்லை. அவரது மனைவி, மச்சான், உறவினர்கள் ஓட்டுக்களே 50-க்கும் மேல் இருக்கும் போது மிகக் குறைவான ஓட்டு வாங்கியது ஏன்? அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியது தானே?
எல்லா இடத்திலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்று இருக்கிறார்களே? அதற்கு காரணத்தை கேட்டீர்களா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறி விளக்கம் கேட்பது எப்படி? உங்களுக்கு பிடித்தால் கட்சியில் வைத்து கொள்வீர்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுவீர்கள்.
எங்கள் மீது புகார் கூறியவர்கள் நன்றாக கட்சி வேலை பார்த்து இருக்க வேண்டியது தானே? அவர்கள் நன்றாக வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு குறைவான ஓட்டு கிடைக்குமா? எண்ணிப் பாருங்கள். கட்சியில் வேலை செய்த எங்களை நீக்கிவிட்டு வேலை பார்க்காதவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
பழனிமாணிக்கம் கூறுகையில், தலைமை என் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக என்ன குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள் என முழுமையாக தெரியவில்லை. கட்சி தோல்வி அடைந்ததற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் கட்சியில் என்ன நடந்தது. என்ன நடக்கிறது என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். இதை பொறுமையாக எதிர்கொள்வேன் என்றார்.
அழகிரி ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் கூறுகையில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தி.மு.க.வில் சேர்ந்த காலத்தில் இருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கட்சிக்காக உழைத்து வருகிறேன். எல்லா நேரங்களிலும், எல்லா போரட்டங்களிலும் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
கடந்த 2004-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு உருவாக அடித்தளமாக இருந்து செயல்பட்டவன் நான்தான். தி.மு.க. விவசாய அணி தலைமையில் நடைபெற்ற போராட்டம் தான் இந்த அமைப்பு உருவாக காரணமாக இருந்தது.
பாரதீய ஜனதா அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்த போது காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, அப்போதைய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வரதராஜன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு, விவசாய சங்க தலைவர்களையும் கோவையில் 2004-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி ஒரே மேடையில் அமர வைத்து மாநாடு நடத்தினேன். அந்த மாநாடு தான் புதிய அரசியல் கூட்டணி உருவாக வழிவகுத்தது. அந்த கூட்டணி 40-க்கு 40 எம்.பி தொகுதிகளை கைப்பற்றியது.
இப்படி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது நான்தான். அப்படியெல்லாம் உழைத்த என்னை தற்போது தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்து இருப்பது எனக்கு ஏற்பட்ட அவமானதாக கருதுகிறேன்.
கட்சி தலைமையிடம் இருந்து எந்த வித நோட்டீஸ் வருகிறதோ-அந்த நோட்டீசில் என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதோ அந்த காரணங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கட்சி தலைமைக்கு பதில் அளிப்பேன்.
நான் கட்சியில் பல வகையில் புறக்கணிக்கப்பட்டு வந்து இருக்கிறேன். சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு முன்பு, மறைவுக்கு பின்பு என்று இரண்டு காலக் கட்டங்களிலும் நான் கட்சி தலைமையால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தெந்த வகையில் நான் புறக்கணிக்கப்பட்டேன் என்பதை மிக விரைவில் சொல்லப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.