3 நாள் தொடர் விடுமுறை... கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள்... ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பயணிகள்
சென்னை: சனி, ஞாயிறு, வினாயகர் சதுர்த்தி என 3 விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால், ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென கட்டணத்தை அதிகப்படுத்தியதால் பயணிகள் பலர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
வார விடுமுறையுடன் சேர்த்து பண்டிகை நாளையும் குடும்பத்தாருடன் கழித்துவிட்டு வர பலரும் ஆசைபடுவது இயற்கை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பயணிகளிடமிருந்து கொள்ளையடிப்பது ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
பொதுவாக சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சாதாரண கட்டணம் 750 ரூபாய் என்றால் தற்போது 1500 ரூபாய் என இருமடங்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல 1500 ரூபாய் கட்டணம் என்றால் தற்போது 2200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இனி தொடர்ந்து ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ள நிலையில், தமிழக அரசு தலையிட்டு இந்தக் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும் ஆம்னி பஸ் நிறுவங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.