இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு... ‘மொழியுரிமை போராட்டம்’ நடத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து தமிழக பள்ளிகளிலும் தமிழைக் கட்டாய பாடமொழியாக்க வலியுறுத்தியும் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை சென்னை வள்ளுவ்ர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
நண்பர்களே , நம் மொழியுரிமையை மீட்கும் மிக முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்போது நாம் அதற்காக போராடவில்லை எனில் வேறெப்போதும் அதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்காது. காரணம் அப்போது நாம் மொழியுரிமையை முற்றிலும் இழந்து நிற்போம். நீதிமன்றம் , கல்வி நிலையம், வங்கிகள், தொடர்வண்டி நிலையம், வானூர்தி நிலையம், காவல்துறை , ஆலயங்கள், இந்திய அரசு நிறுவனங்கள், அஞ்சல் தலை, நாணயங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் நம் மொழியுரிமையை இழந்து நிற்கிறோம்.
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்காமல் நம்மால் ஒருபோதும் இந்தித் திணிப்பை அகற்ற முடியாது. அவர்கள் எந்த வகையிலாவது இந்தியை நம்மீது திணித்து விடுவார்கள். நம் தாய் மொழியை அழித்து விடுவார்கள் . வட இந்தியா முழுவதும் தாய் மொழியை அழித்து விட்ட இந்தியம் தென்னிந்தியாவில் உள்ள கேரளா , கர்நாடகா, ஆந்திராவில் இந்தியை நிலைநாட்டி விட்டார்கள் . தாய் மொழியை மழுங்கடித்து விட்டார்கள் . கடைசியாக இருப்பது தமிழகம் மட்டுமே . அதை நம் பள்ளிகளின் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களை மூளைச் சலவை செய்து இந்தியும் , ஆங்கிலமும் தான் உயர்வான மொழிகள் , தமிழ் மொழி பேசுவதும் இழுக்கு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இந்தியர்கள்.
இந்த நிலையை மாற்றிட நாம் போராடியே ஆக வேண்டும். தமிழகத்தில் தமிழே முதன்மை மொழியாக திகழ்ந்திட வேண்டும் . இந்தியாவில் இந்திக்கு நிகரான உரிமையை தமிழ் மொழி பெற்றிருக்க வேண்டும். அதற்காகவே இப்போரட்டத்தை நாம் முன்னெடுக்கிறோம் . இந்த போராட்டத்தில் அனைத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
கலந்து கொள்வோர் :
தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், அதியமான் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், இராஜ்குமார் பழனிச்சாமி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரன், மக்கள் இணையம் செந்தில் நாதன், புதுமலர் பிரபாகரன், மறத்தமிழர் சேனை, செல்வா பாண்டியர் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் , தமிழ் மணி ,தமிழ் தேசியக் குடியரசுக் கட்சி ,முகிலன் நிறுவனர் தலைவர் கலைபட்டரை, சிவ அசோகன் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர் நேரடி குடியரசு, அருட் கண்ண்ணார் தமிழர் உலகம் மற்றும் தமிழின உணர்வாளர்கள்.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.