பாடகர் கோவனுக்கு நவம்பர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்: எழும்பூர் கோர்ட் உத்தரவு
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனை நவம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டாஸ்மாக்கு எதிராக பாடல் இயற்றி பாடிய பாடகர் கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இரண்டு நாளில் போலீஸ் காவலில் விட எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து கோவன் தாக்கல் செய்த மனுவில், தனக்கும் நக்ஸலைட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். எனவே தன்னை காவலில் எடுத்து விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக தனது வீட்டில் விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், பாடகர் கோவன் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினர் என்றும், அந்த இயக்கம் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், மாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் கோவன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் வளாகத்தில் பேட்டியளித்த கோவன், தம் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.