கருணாநிதி, ஸ்டாலினைச் சந்தித்தார் பாடகர் கோவன்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் ம.க.இ.கவைச் சேர்ந்த பாடகர் கோவன்.
மதுக் கொடுமையை விவரிக்கும் வகையில் மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடல் பாடியதற்காக கோவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கும் பாய்ந்தது. கைது செய்யப்பட்ட கோவன் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார்.
கோவன் கைதுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. பாடல் பாடியதற்காக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று கோபாலபுரம் வந்த கோவன், அங்கு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் தனது கைதை எதிர்த்துக் குரல் கொடுத்த திமுகவுக்கு நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பை வலியுறுத்தி நடத்தவிருக்கும் போராட்டத்தில் திமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் அவர் சந்தித்து நன்றி தெரிவித்தார்.