ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டசபை - 3 நாட்கள் நடைபெறும்
சென்னை: பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் ஜனவரியில் நடைபெறும். தவறினால் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும். முதல் கூட்டம் என்பதால் இதில் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடக்கமாக ஆளுநர் ரோசய்யா காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்தத் தொடங்கினார். அவரது உரை ஆங்கிலத்தில் இடம் பெற்றது. பின்னர் சபாநாயகர் தனபால் தமிழாக்கத்தை வாசிப்பார். அத்துடன் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவடையும்.
இதனைத் தொடர்ந்து நடப்புக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதுபற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும் இன்றைய அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பின்னர் மறுநாள் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள். அந்த விவாதத்திற்கு இறுதியில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து உரையாற்றுவார்.
சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மழை வெள்ளம், மழை நிவாரணப் பணிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், சட்டம்-ஒழுங்கு போன்ற பல பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதால் நடப்பு கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும்.
3 நாள் நடைபெறும்
ஆளுநர் உரைக்குப் பின்னர் சபாநாயகர் ப. தனபால் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் வரும் சனிக்கிழமை வரை அதாவது 3 நாட்களுக்கு கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதாக பின்னர் சபாநாயகர் அறிவித்தார்.