தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு இல்லை- 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பார்?
Recommended Video
சென்னை: சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் நகை கடன்கள் உள்ளிட்ட அனைத்தும் தள்ளுபடியாகும் அறிவிப்பு இடம்பெறலாம் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்து போனதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது.
மேலும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நாளையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் இன்றைய பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள், அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக கடந்த லோக்சபா தேர்தலின் போது, மத்தியில் தங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் 5 சவரன் வரை நகைகளை வைத்து பெற்ற கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக அறிவித்தது. இது அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்தன. பொதுமக்களிடத்தில் திமுகவின் இந்த வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வாக்குறுதியை திமுக இன்னமும் நிறைவேற்ற முடியவில்லை; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத்தான் திமுக பொய்யாக கூறி வருகிறது என அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக பாணியிலேயே அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் விவசாயிகளின் நகை கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மிகப் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது அதிமுக. இதனையடுத்து தமிழகம் ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் நகை கடன்கள் உள்ளிட்ட கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தால் அதிமுக அரசுக்கு ஆதரவு பெருகும் என்பதால் இந்த அறிவிப்பு இடம்பெறலாம் என கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட்டில் கடன் தள்ளுபடிகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
110-ன் கீழ் அறிவிப்பு?
அதேநேரத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர் விவசாயிகள்.