பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது - காப்பியடித்தால் கடும் தண்டனை
தமிழகம் புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதும் பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது.
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடையும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் தவிர, தனித்தேர்வர்களாக 40,682 பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 103 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 278 மையங்கள் அதிகம்.
தேர்வுக்கூடங்களில் ஆள்மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, பிட் அடித்தல் முதலான முறைகேட்டை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளில் சிக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது என்றும் தேர்வுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை செய்துள்ளது. மாணவர்கள் தேர்வு அறைக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.