500, 1000 நோட்டுகளுக்கு ‘சரக்கு’ நோ... கோபத்தில் ‘டாஸ்மாக்’ கடைக்கு பூட்டு போட்ட ‘குடி’மகன்கள்!
தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையொன்றில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த ஊழியர்களை கடையின் உள்ளே வைத்து, ‘குடி’மகன்கள் பூட்டிச் சென்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த ஊழியர்களை டாஸ்மாக் கடையின் உள்ளே வைத்து, 'குடி'மகன்கள் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், கையில் ரூ. 25 ஆயிரம் பணம் வைத்திருந்தும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் நேற்று மக்கள் பலர் அல்லாடியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை இந்த சில்லறைப் பிரச்சினை ஏற்படுத்திய போதும், நாட்டின் நலனைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது.
பொதுமக்கள் கோபத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரலாம் என நாடு முழுவதும் நேற்று முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், எங்கும் எதிர்பார்த்தபடி அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
ஆனால், குடிமக்களுக்கு இருந்த இந்தப் பொறுமையும், தெளிவும் 'குடி'மகன்களுக்கு இல்லை என்பதை தஞ்சாவூர் அருகே நடந்த சம்பவம் தெளிவு படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று வழக்கம்போல் மது அருந்த வந்த 'குடி'மகன்கள் சிலர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நீட்டியுள்ளனர்.
ஆனால், இந்த நோட்டுகள் செல்லாது என அங்கிருந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் ஆத்திரம் தீராமல், கடை ஊழியர்களை கடைக்குள்ளேயே வைத்து வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று கடையைத் திறந்து உள்ளிருந்த ஊழியர்களை மீட்டனர்.