தங்க தமிழ்செல்வன், முன்னாள் எம்பி பாலகங்காவுடன் தீவிர ஆலோசனை நடத்திய தினகரன்
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்துக்கு அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் மற்றும் முன்னாள் எம்பி பாலகங்கா ஆகியோர் வந்தனர். அவர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஆளும் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவு பட்டது. கட்சியின் சின்னமான இரட்டை இலைக்கு இரு அணிகளும் உரிமை கொண்டாடியதால், தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இந்த சூழ்நிலையில், இரு அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதில் மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

இதனிடையே நேற்று அதிமுக அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், பெங்களூரில் இருந்து திரும்பிய டி.டி.வி.தினகரன் இன்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் மற்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவிக்கையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதே வேளையில் அவர் இன்று காலை அளித்த பேட்டியின் மூலம் வேதாளம் முருங்கை மரம் ஏறியது தெரிகிறது எனக் கூறினார்.
மேலும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்குத் தெரியாமலேயே அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என்றால் எதுவும் பேசி முடிவு எடுக்க முடியாது. ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு எதுவும் அமைக்கப்படவில்லை. முதல்வர் பதவி உள்பட 6 அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார் என்றார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்துக்கு அதிமுக அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் மற்றும் முன்னாள் எம்பி பாலகங்கா ஆகியோர் வந்தனர். அவர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications