தேனி மாவட்ட தேமுதிக பொதுக் கூட்டத்தில் கல்வீசி ரகளை செய்த கும்பல்
தேனி: தேனியில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஸ்ரீரங்காபுரத்தில் நேற்றிரவு தேமுதிகவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக கட்சியின் 10 ஆவது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்து வருகின்றது.
தேமுதிக பொதுக்கூட்டம்:
அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தின் தேமுதிக கட்சியினர் வலுவாக உள்ள தேனி மாவட்டம் ஸ்ரீரங்காபுரம் பகுதியில் நேற்றிரவு அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக பிரமுகர்கள்:
கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் எஸ்.கணேசன், கேப்டன் மன்ற துணைத்தலைவர் பொன்னுச்சாமி, தலைமை கழக பேச்சாளர் ராமச்சந்திரன், மற்றும் எஸ்.கே குருநாதன், தேனி ஒன்றிய செயலாளர் டி.பி.கருணாகரன், மாவட்ட செயலாளர் கே.கே.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருட்டான பகுதியில் கல்வீச்சு:
மாநில தொண்டரணி செயலாளர் எஸ்.கணேசன் இரவு 9 மணி அளவில் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் அருகிலிருந்த இருட்டான பகுதியிலிருந்து கற்களை வீசினர்.
காவல்நிலையத்தில் புகார்:
இதில் கேப்டன் டி.வி கேமிராமேன், ஒன்றிய செயலாளர் ஆகியோரின் மீது கற்கள் பட்டது. இதில் போட்டோகிராபர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஒன்றிய செயலாளர் கருணாகரன் காவல்நிலயத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கோபத்தில் தேமுதிகவினர்:
விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் போராட்ட தேதியை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார் கருணாகரன். இந்த செயல் தேனி மாவட்ட தேமுதிக வினரை மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.