லைக்காவுக்கு எதிராக செயல்பட எங்களுக்கு என்ன தேவை உள்ளது? திருமாவளவன் விளாசல்
இலங்கையின் லைக்கா அமைப்புக்கு எதிராக செயல்பட எங்களுக்கு என்ன தேவை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இலங்கையின் லைக்கா அமைப்புக்கு எதிராக செயல்பட எங்களுக்கு என்ன தேவை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற தமிழர்களின் அச்சத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் வேண்டுகோள் விடுத்தோம் என்றும் லைக்கா நிறுவனத்துக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
லைக்கா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல இருந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இலங்கை பயணத்துக்க எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் அரசியல் ஆதாயத்துக்காக தமிழ் தலைவர்கள் இதனை அரசியலாக்கமுயல்வதாக குற்றம்சாட்டியது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தற்போதைய அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள வவுனியா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென யாம் விடுத்த வேண்டுகோளை நடிகர் ரஜினிகாந்த், நேர்மறையான வகையில், சரியான கோணத்தில் புரிந்து கொண்டு தனது பயணத்தைத் தவிர்த்திருக்கிறார். இது அவரது பக்குவமான பண்புநலன்கள்களை வெளிப்படுத்துகிறது.
இதைவிட நகைப்புக்குரியது வேறென்ன?
இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் பெயரால் வெளியாகியுள்ள அறிக்கையில், "அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர், இதனை அரசியலாக்குகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதிலென்ன ஆதாய நோக்கம் இருக்க முடியுமென்று விளங்கவில்லை. ரஜினிகாந்த் பயணத்தையும் லைக்கா நிறுவனத்தின் செயற்பாடுகளையும் எதிர்ப்பதால், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றுவிட முடியுமென்று யாம் நம்பினால், இதைவிட நகைப்புக்குரியது வேறென்ன இருக்கமுடியும்?
குறைகூறவோ, எதிர்க்கவோ இல்லை
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது தான், வடக்கு மாகாணத் தமிழர்களின் அச்சம். அதனை வெளிப்படுத்தும் வகையில் தான் ஒரு வேண்டுகோள் விடுத்தோம். மற்றபடி,
லைக்கா நிறுவனத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டிய தேவை நமக்கென்ன உள்ளது? அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் செய்வதை யாம் குறை கூறவோ எதிர்க்கவோ இல்லை.
வெறும் கற்பனையே, யூகமே
சிங்கள ஆட்சியாளர்களை 40க்கும் மேற்பட்ட நாடுகள், அண்மையில் ஐநா மனித உரிமை மன்றத்தில் வன்மையாகக் கண்டித்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், ஜினிகாந்த் வரவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சிங்கள அரசு முயற்சிக்கிறது என்பது தான் தமிழ்மக்கள் முன்வைக்கும் கருத்தாகும். இது வெறும் கற்பனை, யூகம் என்று லைக்கா நிறுவனத்தாரும், இன்னும் சிலரும் கருதலாம். ஆனால், நம்முடைய நோக்கம் ரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ, அரசியல் ஆதாயமோ, விளம்பர நாட்டமோ அல்ல என்பதை உறுதிபடுத்த விரும்புகிறோம். மாறாக, அப்படி லைக்கா நிறுவனத்தார் நினைத்தால் அதுவும் வெறும் கற்பனையே, யூகமே ஆகும்.
சாதகமாகிவிடக் கூடாது
அத்துடன், எமது இந்த நடவடிக்கையானது, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கிவிடக் கூடாது என்பதிலிருந்து எழுந்த எதிர்ப்பு மட்டுமே என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.