செல்போன் மாயம்- நர்ஸ் சீருடையை கழற்றி சோதனை செய்த டாக்டர்... ஊழியர்கள் போராட்டம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தனது செல்போன் காணாமல் போனதால் அங்கு பணியாற்றும் நர்சின் சீருடைகளை கழற்றி சோதனை செய்த டாக்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில்
திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் தமது செல்போன் காணாமல் போனதால், அங்கு பணியாற்றும் நர்சின் சீருடைகளை கழற்றி சோதனை செய்த டாக்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கீழப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி ரேகா, திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டில் செவிலிய உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3ம் தேதி இரவு பணியின் போது , பெண் டாக்டரான இஷ்ரத் நஸ்ரீன் தமது செல்போன் காணாமல் போனதாக நிலைய உதவி டாக்டர் தினேஷ் கண்ணாவிடம் புகார் செய்தார். இதனால் நர்சுகள் அனைவரையும் சோதனை செய்ய முடிவுசெய்தனர்.
ரேகா உள்ளிட்ட அனைத்து நர்சுகளிடம் சோதனை செய்தனர். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து ரேகாவை மட்டும் டாக்டர் தனியாக அறைக்குள் அழைத்து சென்று சீருடைகளை கழற்றி சோதனையிட்டார். ஆயினும் செல்போன் கிடைக்கவில்லை.
இதனால் கடுமையான மன் உளைச்சலுக்கு ரேகா ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது ரேகா அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டரின் இந்த செயலை கண்டித்தும், டாக்டர்கள் தினேஷ் கண்ணா மற்றும் இஷ்ரத் நஸ்ரீன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுகாதார மருத்துவ ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை மருத்துவமனை வாயிலில் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக போராட்டம் நடந்த்தியவர்களுடன் டீன் மீனாட்சிசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டீன் தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்பட்டது.