பஸ் ஸ்டிரைக்... படு தாமதமாக வந்த நெல்லை- ஈரோடு பாசஞ்சர் - பயணிகள் அவதி
அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக ரயில்களை நம்பியுள்ள நிலையில் பயணிகள் ரயிலும் படு தாமதமாக வந்து பயணிகளை அவதிக்கு ஆளாக்கி வருகிறது.
திண்டுக்கல்: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் படு தாமதமாக வந்து கிளம்பி சென்றதால் பயணிகள் கடும் எரிச்சலுக்கு ஆளாகினர்.
ரயில் எண்56826 நெல்லை- ஈரோடு பாசஞ்சர் நெல்லையில் இருந்து காலையில் கிளம்பியது. ஒவ்வொரு ரயில் நிலையமாக படு தாமதமாகவே வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 9 பெட்டிகளுடன் தனியாகப் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை செல்லும். நாள்தோறும் 11.30 அல்லது 11.40-க்கு திண்டுக்கல்லை கடக்க வேண்டிய ரயில் இன்று 12.10 க்கு வந்தடைந்தது.
பெட்டிகள் மற்றும் எஞ்சின் பிரிக்கப்பட்ட பின் சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக ரயில் நிலையத்தை விட்டு கிளம்பாமல் இருந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பேருந்துகள் வேலை நிறுத்தத்தால் அவதிப்பட்ட பயணிகள் ரயிலும் தாமதமாக கிளம்பியதால் கடும் எரிச்சலடைந்தனர். இந்த ரயில் மார்க்கம் சிங்கிள் லைன் என்பதால் கோவையில் இருந்து வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் 1.45 மணிக்குத்தான் திண்டுக்கல் ரயில் நிலையத்தை விட்டே ரயில் கிளம்பியது. இதனையடுத்து அப்பாடா என்று ரயில் பெட்டிகளில் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தனர் பயணிகள்.
ஒருவழியாக மாலை 5.15 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது அந்த பயணிகள் ரயில். காலை 5.15 மணிக்கு கிளம்பி மாலை 5.15 மணிக்கு கிட்டத்தட்ட 12 மணிநேரம் படு தாமதமாக பயணித்து ஒருவழியாக ஈரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு ஓய்வெடுத்தது அந்த ரயில். பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் வேறு வழியின்றி ரயிலில் ஏறியவர்கள் நொந்து கொண்டே இறங்கி சென்றனர்.