பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டசபைக் கூட்டம்... ஒரு வாரம் நடைபெறலாம்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக சட்டசபைக் கூட்டம் டிசம்பர் 4ம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத் தொடர் ஒரு வார காலத்திற்கு நடைபெறலாம் என்று தெரிகிறது.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறந்த வி்வகாரம் பெரும் சூட்டைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அரசு அலுவலகங்களிலும், முதல்வர் உள்ளிட்டோரின் அலுவலகங்களிலும் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் விவகாரமும் வெடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு எப்படி திமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையின் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், தமிழக சட்டசபையின் கூட்டத்தை டிசம்பர் 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 174 (1)ன் பிரிவின்படி கவர்னர் கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இது குளிர்காலக் கூட்டத் தொடராகும். வழக்கமாக இது அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில்தான் கூட்டப்படும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக டிசம்பரில் கூட்டப்பட்டுள்ளது. குளிர்காலக் கூட்டத் தொடர் ஒரு வாரத்திற்கு நடைபெறுவது வழக்கம். தற்போதைய கூட்டத் தொடரும் அதே அளவிலான நாட்களில் நடைபெறும் என்று தெரிகிறது.குறைந்த நாட்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
பருப்பு, முட்டை கொள்முதலில் முறைகேடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம், காவிரியின் குறுக்கே கர்நாடகம் 2 அணைகள் கட்டும் விவகாரம், யூரியா உர தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா இருந்திருந்தால் இத்தனை பிரச்சினைகளையும் தனது அமைச்சர்களின் துணை கொண்டு எளிதாக சமாளித்திருப்பார். ஆனால் இப்போது இந்த அமைச்சர்களே அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் அதிமுக தரப்பு பெரும் பதட்டத்துடன் காணப்படுகிறது.
மொத்தத்தில் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.