ஆக. 24 முதல் செப். 29 வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 24-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரான பின்னர் நடைபெறும் முதலாவது சட்டசபைக் கூட்டத் தொடர் இது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அப்போது முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். சட்டசபையில் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறும். ஆனால் கடந்த மார்ச் மாததத்துக்குப் பின்னர் சட்டசபை கூட்டம் கூட்டப்படவே இல்லை.
இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மே 23-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை.
மேலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே சட்டசபை கூட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 24-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் கூடுகிற முதலாவது சட்டசபை கூட்டத் தொடர்.
இந்நிலையில் இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் வரும் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை அதாவது மொத்தம் 18 நாட்கள் சட்டசபை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மானியக் கோரிக்கைகள் மீது 2 நாட்கள் விவாதம் நடத்த வேண்டும்; கடந்த கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டு சபாநாயகரை கெரோ செய்ததற்காக சஸ்பென்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், முதல் நாளன்று இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பின்னர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.