பீதி உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் அரிசி.. மோசடியை கண்டறிவது எப்படி தெரியுமா?
நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி பீதி பாடாய் படுத்தும் நிலையில் இதை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.
சென்னை : வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி பீதி ஒட்டிக் கொண்டுள்ளதால் மக்கள்
பீடியடைந்துள்ளனர். அவர்களின் குழப்பங்களுக்கான தீர்வாகவே பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் நல்ல விஷயங்களானாலும், கெட்ட விஷயங்களானாலும் உடனடியாக அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் ஒரு விஷயம் பிளாஸ்டிக் அரிசி.
அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவிலேயே பிளாஸ்டிக்காக என்று மக்கள் பீதியில் உள்ளனர். சாப்பாட்டில் ருசியைத் தேடி சாப்பிட்டவர்கள் தற்போது தங்கள் தட்டில் உள்ளது அரிசிச் சாதமா, பிளாஸ்டிக் அரிசிச் சாதமா என்று ஒரு வித சந்தேகத்துடனே உள்ளனர்.
எப்படி கண்டுபிடிப்பது?
எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பீதி இருந்தாலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது என்ற எளிமையான வழிமுறைகளை கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் மிதக்கும்
தண்ணீர் நிரப்பிய கண்ணாடி டம்ளரில் அரிசியை போட்டால், நல்ல தரமான அரிசி என்றால், அரிசி மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் தங்கும். அதுவே பிளாஸ்டிக் என்றால் மிதக்கும். அடுத்து சூடான எண்ணையில் நல்ல அரிசியைப் போட்டால், அது போட்டவுடன் பாத்திரத்தின் அடியில் தங்கும். பிளாஸ்டிக் என்றால் அது பிஸின் போன்று உருகவோ அல்லது கூழ் போலவோ மாறும்.
எரித்தால் நாறும்
அடுத்து நல்ல அரிசியை எரித்தால் அது பொரிந்து கருகும் தன்மையாக இருக்கும். பிளாஸ்டிக் என்றால் அது எரிவதோடு, அதிலிருந்து ஒருவித நாற்றமும் வீசும். இந்த எளிய வழிகளைக் கையாண்டு போலியானவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.
புகார் எண்
மேலும் பொதுமக்கள் உணவுப்பொருட்கள் தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக புகார் அளிக்கும்பட்சத்தில், அந்தப் புகார் சென்னையில் பெறப்பட்டு உரிய அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.