புதிய வரைவு பாடத்திட்டம்.. மக்கள் கருத்துக்காக இணையதளத்தில் வெளியீடு...
புதிய வரைவு பாடத்திட்டத்தை இணையதளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சென்னை: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை இணையதளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
தமிழக அரசின் பாடத்திட்டம் நீண்ட காலமாக மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கல்வி ஆணையத்தின் பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டால் தமிழக அரசின் பாடத்திட்டம் மிகவும் பழமையானதாக உள்ளது.
இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்பதால் பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசின் பாடத்திட்டத்திலிருந்துதான் கேட்கப்பட்டன. இதை தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
பாடத்திட்டங்களில் மாற்றம்
மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்கின் போது பாடத்திட்டத்தை மாற்றாதது குறித்து நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை என்றனர்.
பாடத்திட்டம் மாற்றப்படும்
நீட்டுக்கான பயிற்சி மையங்களில் செலவு செய்து பயிற்சி பெறும் நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலை இல்லை. எனவே போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தமிழக அரசு கூறியது.
வல்லுநர்கள் குழு அமைப்பு
அதன்படி வரும் 2018-2019-ஆம் கல்வி ஆண்டில் 1, 6, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை மாற்றுவது என்றும் ஏனைய வகுப்புகளுக்கு அடுத்த 3 கல்வியாண்டுக்குள் படிப்படியாக மாற்றுவது என்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சகம் தெரிவித்தது. புதிய பாடத்திட்டத்தை தயார் செய்வதற்காக கல்வியாளர்கள் அடங்கிய 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வரைவு பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணையதளத்தில் வெளியிட்டார்.
இணையதளத்தில் வெளியீடு
1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டமானது www.tnscert.org என்ற இணையதளத்தில் CCE MATERIALS என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்துவிட்டு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்
மக்களின் கருத்து கேட்புக்குபின்னர் ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டங்கள் மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்றும் போட்டித் தேர்வுகளை கையாளும் விதத்திலும் இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.