வைகோ பிறக்கும் போதே லவுட்ஸ்பீக்கருடன் பிறந்தவர்... ஜெயக்குமார் கிண்டல்!
Recommended Video
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறக்கும் போதே லவுட்ஸ்பீக்கருடன் பிறந்தவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். ஊடகங்கள் முன்பு வீரவசனம் பேசும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் வைகோவை கேலி செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : கடந்த மார்ச் 10ம் தேதி புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதையடுத்து, மீனவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு 10 ஆயிரம் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கடலோர காவல்படை, நேவி உள்ளிட்டவற்றின் மூலம் மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அருகில் இருக்கும் தீவுகளில் கரை ஒதுங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவா கடற்கரை பகுதியில் 100 படகுகள் இருக்கிறது, அவர்களுக்கு மட்டுமே தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பாதையில் புயல் எச்சரிக்கை இல்லை என்பதால் பயப்பட தேவையில்லை.
விதிமுறைகள் வகுத்து சுற்றுலா அனுமதி
குரங்கணி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலாவிற்கு தடைவிதிப்பது சரியாக இருக்காது. சுற்றுலாவும் மேம்பட வேண்டியது அவசியம், எனவே தகுந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு பாதுகாப்புடன் மலையேற்றம் போன்றவை அனுமதிக்கப்படும்.
வைகோவை மதிக்கிறேன்
இதனைத் தொடர்ந்து வைகோ, ஜெயக்குமார் ஊடகங்களில் பேசிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் நான் மதிக்கக் கூடிய அண்ணன் வைகோ.
வைகோ லவுட்ஸ்பீக்கருடன் பிறந்தவர்
அவர் ஏன் என்னை அப்படி சொன்னார். அவர் பிறக்கும் போதே லவுட் ஸ்பீக்கருடன் பிறந்தவர், நான் லவுட் ஸ்பீக்கருடன் பிறக்கவில்லை. நானாக யாரிடமும் கருத்து சொல்லவில்லை.
வைகோ வீரவசனம் பேசுபவர்
கட்சியின் சார்பாகவும் அரசின் சார்பாகவும் தான் நான் பேசுகிறேனே தவிர வீணாக ஊடகங்கள் முன்பு வீரவசனம் பேசுபவன் கிடையாது. அந்த வீரவசனம் பேசும் பழக்கம் அண்ணனுக்கு மிக அதிகமாகவே உண்டு என்று ஜெயக்குமார் சிரித்துக் கொண்டே கூறினார்.