சம ஊதியம் வழங்குக... ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது
சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக. அறிவிக்கப்பட்டிருந்தது.
டிபிஐ வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்தனர்.
ஒரே பதவி ஒரே பணி
2009ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருக்கிறது என்பது இடைநிலை ஆசிரியர்களின் புகாராகும். ஒரே பதவி, பணி, கல்வித்தகுதி என அனைத்தும் இருந்தும், இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர்.
அரசு உத்தரவாதம்
இந்த ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7வது ஊதியக் குழுவில் 2009-க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அரசு நிறைவேற்றவில்லை
ஆனால், தற்போது 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. எனவே, 2009க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள்
கடந்த ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறி தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.
முற்றுகைப் போராட்டம்
மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் டிபிஐ வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கைது
இதனிடையே ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்தனர். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற போராட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பட்டினி போராட்டம்
காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் கைதான பின்னரும் போராட்டத்தை தொடர்கின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை பட்டினி போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். நேரம் செல்ல செல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளளனர்.