ஆகாகாகா.. தேர்தல் ஆணையரே கிடையாதே.. இப்ப எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவீங்க!!!
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் காலியாக உள்ளது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் அதற்கான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் ஹைகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள் தேர்தல் நடத்துமாறு நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர். அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தெரிவித்தும் நீதிபதிகள் தேர்தல் ஆணைய தரப்பின் விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
மீண்டும் மனு
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த சிறிது காலஅவகாசம் வேண்டி ஹைகோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று ஹைகோர்ட்டில் நடைபெற்றது.
மனுவில் உள்ளது என்ன
வாக்காளர் பட்டியலை விரைவாக தயாரிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், வருவாய் துறை அதிகாரிகள், சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கரார்
எனினும் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் கடிந்து கொண்டனர்.
மாநில தேர்தல் ஆணையர் பதவி காலி
இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையராக இருந்த சீதாராமன் கடந்த 2015-இல் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட அப்பதவியில் ஆணையராக இருந்த சீதாராமனின் பதவிக்காலம் கடந்த மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
அரசிடம் ஒப்படைப்பு
இதைத் தொடர்ந்து தனது பொறுப்புகளை தமிழக அரசிடம் சீதாராமன் ஒப்படைத்துவிட்டார். எனினும் இதுநாள் வரை அந்த பதவிக்கு ஆணையர் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆணையர் பதவியை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
சீதாராமன் மறுநியமனம்
இந்நிலையில் ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமனையே மீண்டும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை அரசு செய்யுமா அல்லது ஆள் இல்லாததையே காரணமாக கூறி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க முயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.