திமுக கூட்டணி வேண்டாம்- காங். மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தல்! உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி?
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடம் அக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதில் திமுகவுடனான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை திமுக கொடுத்தது. ஆனால் அக்கட்சி 8 இடங்களில்தான் வென்றது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிடலாம் என திமுகவில் ஸ்டாலின் தரப்பு முடிவு செய்தது.
ஆனால் கருணாநிதியோ காங்கிரஸும் கூட்டணியில் நீடிக்கட்டும் என விரும்பினார். இருப்பினும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்தது.
ராகுல் வருகையால் சர்ச்சை
இந்த நிலையில் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்திக்க வந்தது சர்ச்சையை கிளப்பியது. திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் காங்கிரஸ் கைகோர்க்க தயாராகிவிட்டதாக கூறப்பட்டது.
திமுகவுடன் முரண்பாடு
அத்துடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தார். மேலும் எந்த ஒரு கூட்டணியும் ஆயுட்கால கூட்டணியே அல்ல எனவும் திருநாவுக்கரசர் கூறிவந்தார்.
மாவட்ட தலைவர்கள் கூட்டம்
இதனால் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்து பேசினர்.
ஸ்டாலினே காரணம்
இதற்கு பதிலளித்து பேசிய திருநாவுக்கரசர், சட்டசபை தேர்தலை திமுகவின் தலைவர் கருணாநிதி கையாண்டார். உள்ளாட்சித் தேர்தலை அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கையாளுகிறார். இருவரின் அணுகுமுறையும் மாறுபாடாக உள்ளது. மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே சதவீத அடிப்படையில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், காங்கிரஸின் மாவட்டத் தலைவர்களுடன் பேசி இறுதி செய்வார்கள் எனக் கூறிவிட்டார். அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்றார்.
வாக்கெடுப்பு
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறும் மாவட்டத் தலைவர்களை கையை உயர்த்துமாறு திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார். மாவட்டத் தலைவர்கள் 61 பேரில் பெரும்பான்மையோர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கையை உயர்த்தியுள்ளனர்.
திமுக கூட்டணி..
அதன் பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறுபவர்களைக் கையை உயர்த்துமாறு திருநாவுக்கரசர் கூறினார். இதற்கு ஒரு சிலர் மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடக் கூடும் என தெரிகிறது.