மின் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்த இன்றே கடைசி நாள்
சென்னை: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்க், தபால் நிலையங்கள், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த கொடுக்கப்பட்ட விதி விலக்கு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இனி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு மட்டுமே போக வேண்டும். டிசம்பர் 30ம் தேதி வங்கிகளில் தங்களது கணக்குகளில் இந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்கைத் தொடங்கி அதில் டெபாசிட் செய்யலாம். வேறு இடங்களில் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது.
நவம்பர் 8-ம் தேதி முதல் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு, முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதைத் தடுக்க விரலில் அடையாள 'மை' வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்தநிலையில் வங்கிகள், தபால் நிலையங்களில் மட்டும் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பெட்ரோல் பங்குகளிலும் பணத்தை மாற்ற அனுமதி தரப்பட்டது. அதேபோல மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்டவற்றைக் கட்டவும் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்த விதி விலக்கு தரப்பட்டது.
இந்தக் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இனிமேல், தங்கள் கைவசம் உள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கிகளுக்குச் சென்று டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். டிசம்பர் மாதம் 30-ந்தேதி வரை பொதுமக்கள் இதை மேற்கொள்ளலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்குத் தொடங்கி, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தலாம்.
டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த வங்கிகளின் விவரம் விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ 500, 1000 இங்கெல்லாம் இன்று மட்டும் பயன்படுத்தலாம்....
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறுமிடங்கள்.
இங்கெல்லாம் இன்று மட்டும்தான் ரூ 500, 1000 நோட்டுகளைப் பயன்படுத்த முடியும். நாளை முதல் செல்லாது.