சென்னையில் கொட்டிய கனமழை... சாலையில் நெரிசல் - அவதியில் மக்கள்
சென்னையில் இன்று காலை பெய்த கனமழையால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சாலையோரங்களில் வெள்ளநீர் தேங்கியதால் நகரின் முக்கிய பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள். பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
கன மழை காரணமாக சென்னை சாலைகள் மீண்டும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
திருவொற்றியூர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை என சென்னையின் பல இடங்களில் இன்று காலையும் மழை கொட்டியது. இதனால் வடசென்னை போக்குவரத்து கடும் நெரிசலுக்கு ஆளானது.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாலைகள், மேலும் மோசமடைந்துள்ளன. சென்னையின் பல குடியிருப்புகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னையின் பல இடங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 8 மணி வரை ஒரு மணி நேரம் கொட்டியது. பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
ஓட்டேரி, பட்டாளம், புரசைவாக்கம் எழும்பூர், அண்ணாநகர், பாரிமுனை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் லேசாக பெய்தது. அதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரத்திலும் மழை கொட்டியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்படக்கூடிய காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்தனர்.
நகரில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை தூறலாக இருந்ததால் விடுமுறை விடப்படவில்லை.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்ல நெரிட்டது. ஆட்டோக்கள், பள்ளி வாகனம் வழக்கமான நேரத்திற்கு வராததால் பள்ளி குழந்தைகள் மழையில் நனைந்தபடி பேருந்து நிறுத்தத்தில் பல மணி நேரம் காத்து நின்றனர்.
மழையால், காலை 8.30 மணி வரை பள்ளிகளுக்கு மாணவர்களால் வர முடியவில்லை. டவுட்டன், புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மழையால் மாணவ, மாணவியர் குறைந்த அளவிலேயே வந்தனர்.
இதேபோல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் காலையில் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா சாலை, கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், திருவான்மியூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றதால் அலுவலகத்திற்கு பலரும் தாமதமாகவே சென்றனர்.