2ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர சீட் பெற்ற திருநங்கை
காரைக்குடி: காரைக்குடியில் நடைபெற்ற பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வில் திருநங்கை ஒருவர் இடஒதுக்கீட்டின் மூலம் சீட் பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பி.இ படிப்பிற்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இக்கலந்தாய்வில் கிரேசி பானு என்ற திருநங்கை கலந்து கொண்டு மிண்ணனுவியல் பிரிவில் தான் விரும்பிய அரக்கோணத்தில் அமைந்துள்ள கல்லூரியை தேர்வு செய்தார். சேர்க்கைக்கான உத்தரவை 2 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான செயலாளர் மாலா வழங்கினார்.
கிரேசியின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முடித்துள்ளார். அதில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
வளாகத்தேர்வில் வென்று மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த போதுதான் அவருடைய பாலினத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் வெளியிலும், அலுவலகத்திலும் பல்வேறு அவமானங்களைச் சந்தித்துள்ளார் அவர். இதனால் வேலையை உதறிவிட்டு மேல்படிப்பு படிக்க உத்தேசித்திருந்தார்.
பானு பி.இ படிக்க விரும்பியபோது, இது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்க முடியுமா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளார். ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் பாலினத்தை மாற்றி கெஜட்டில் பதிவு செய்து பெரிய போராட்டமே நடத்தி சான்றிதழை பெற்றுள்ளார்.
எவ்வளவோ தகுதிகள் இருந்தும் உரிமையை நிலை நாட்டமுடியாமல் தவிக்கும் திருநங்கைகள் சமுதாயத்திற்கு பானுவின் வெற்றி ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications