திருப்பதி பயணம் திரும்பா பயணமானது எப்படி? : மணப்பாறை கோர விபத்தின் பின்னணி
திருப்பதிக்கு சுற்றுலா சென்றவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
Recommended Video
திருச்சி: நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா சென்றவர்கள் திருச்சி அருகே விபத்தில் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிச்சம் குறைவு, வேன் டிரைவரின் வேகமே 10 பேர் மரணத்திற்கு காரணமாகியுள்ளது.
மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகர்கோவில் தெற்கு குளத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம்,79. இவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் டெம்போ வேனில் நேற்று திருப்திக்கு புறப்பட்டார். டெம்போ வேனில் டிவைர் உள்பட 15 பேர் இருந்தனர்.
சாலை விபத்து
வேன் நேற்றிரவு 11.30 மணியளவில் மதுரையை கடந்து திருச்சி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த வைத்திலிங்கம் உள்பட 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மீட்புப்பணி
இதுபற்றி தகவலறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.
அவர்கள் மணப்பாறை, திருச்சியில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். ஐவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோகத்தில் முடிந்த பயணம்
நாகர்கோவிலில் இருந்து திருப்பதி சென்ற சுற்றுலா வேன் விபத்தில் சிக்கிய சம்பவம் அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரத்தில் சர்வீஸ் சாலையில் வெளிச்சம் குறைவாக இருந்துள்ளது. வேன் டிரைவர் முன்னால் சென்ற வாகனத்தை கவனிக்காமல் வேகமாக ஓட்டிச்சென்றதாலேயே விபத்து நேரிட்டதாக வேனில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். திருப்பதி பயணம் திரும்பா பயணமாகிவிட்டதே என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்தை தடுக்க முடியாதா?
திருச்சி மணப்பாறை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி 5 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணப்பாறை அருகே நிகழ்ந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். மணப்பாறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களால் நொச்சிமேடு பகுதியிலும் அதன் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியிலும் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.