தடைகள் உடைய பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் நடத்திய தினகரன்
வழக்குகளில் இருந்து விடுபட டிடிவி தினகரன் மிகப்பெரிய பூஜை ஒன்றை செய்திருக்கிறார்.
சென்னை: பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் பூஜை செய்தால் வழக்குகளில் இருந்து விடுபடலாம் என்று ஆதரவாளர்கள் கூறியதை அடுத்து திண்டிவனம் அருகே உள்ள கோவிலில் சில தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் யாகம் நடத்தி வழிபட்டுள்ளார்.
பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் நடத்தினால் பல்வேறு தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி, செவ்வாய்கிழமைகளில் பிரத்யங்கிரா தேவியை வணங்கினால் இழந்த செல்வம், புகழ், பணம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உள்ளது.
சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் உள்ள மொரட்டாண்டியில் பிரத்யங்கிரா காளியம்மன் கோயில் உள்ளது. 500 வருடப் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் வாசலில் மிகவும் சக்தி வாய்ந்த காளியம்மன் 72 அடி உயரத்தில் பிரமாண்டச் சிலையாக இருக்கிறார். இங்கு பௌர்ணமி, அமாவாசை, செவ்வாய் கிழமைகளில் கூட்டம் அலைமோதும்.
பிரத்யங்கிரா தேவி
பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு யாகம் நடத்தினால் வெற்றி கிட்டும். மிளகாய் யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு சாதாரண பக்தர்களை காட்டிலும், பிரபல அரசியல் தலைவர்கள் மிகவும் ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்வதும், யாகம் வளர்ப்பதும் நடைபெற்று வருவது வழக்கம்.
தலைமை பொறுப்பு
டிடிவி தினகரனுக்கு கட்சியையும், ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது ஆசை. ஆனாலும் பல தடைகள் உள்ளன. வழக்குப் பிரச்சினைகள் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது.
வழக்கு பிரச்சினைகள் தீரும்
வழக்கு பிரச்சினைகள், கட்சியில் தலைமை பதவிக்கு வருவதற்கான தடைகள் நீங்க, பூஜை, யாகம் என்று கிளம்பி விட்டார் டிடிவி தினகரன். பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் செய்தால் தடைகள் நீங்கும் என்று ஜோதிடர்கள் பரிகாரம் கூறியுள்ளனர்.
மிளகாய் யாகம்
இதனையடுத்தே கடந்த 13ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று கோவிலுக்கு சென்று மிளகாய் யாகம் நடத்தி விட்டு வந்திருக்கிறார் தினகரன். மாலை நேரம் பிரத்யங்கிரா கோயிலுக்குச் சென்றார் தினகரன். பிரத்யங்கிரா தேவிக்குச் சிறப்பு பூஜைகள், மிளகாய் போட்டு சுமார் ஒருமணி நேரம் ஹோமம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலையில் சென்ற அவர் இரவில்தான் சென்னை திரும்பினாராம்.
ஆதரவாளர்கள் சந்திப்பு
யாகம் நடத்தி விட்டு வந்ததில் மீண்டும் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிகளுடன் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பரபரப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டார். நம்ம நோக்கம் ஆட்சியை கலைப்பது அல்ல. ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி, கட்சிப்பொறுப்பு நம்ம கையில் வரணும் என்று கூறி வருகிறாராம் டிடிவி தினகரன். வழக்கில் இருந்து விடுபடுவாரா தினகரன் பார்க்கலாம்.