தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து 2 பேர் பலி
சுட்டெரிக்கும் வெயில் தாங்கமுடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. காலை முதலே சுட்டெரிக்க தொடங்கியது, மே 29வரை நீடிக்கும் வெயிலின் அளவு 113 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்துகிறது.
இந்த நிலையில் இன்று முதல் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வெப்பம் அதிகரிப்பு
தமிழகத்தின் உள்மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையானது, இயல்பில் இருந்து ஒன்றில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த நிலை அடுத்துவரும் மூன்று தினங்களுக்கு தொடரக்கூடும்.
கோடை மழை
மேலும் அடுத்து வரும் இரு தினங்களில், உள்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கோடை மழை இடியுடன் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை தொடரக்கூடும். என்றார்.
வெயிலுக்கு 2 பேர்
அக்னியின் தாக்கம் காலை முதலே தொடங்கி விட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்திமார்க்கெட் அருகே வெயில் தாங்கமுடியாமல் 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று 70 வயது முதியவரும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். உயிரிழந்த 2 பேரும் யார் என்பது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடமாட வேண்டாம்
பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள 12 மணி முதல் 4 மணிவரை பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள் நடமாட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஒருவேளை வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குடையோடு செல்லுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
குளிர்ச்சியான உணவு
அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். கோடையில் கிடைக்கக்கூடிய காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம்.