டாஸ்மாக்கை மூடவேண்டும் அரசு – 60 வயது முதியவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
தேனி: தேனியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூடக் கோரிக்கை விடுத்து இரண்டு முதியவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசிய பேரவை, தமிழ் தேச குடியரசு இயக்கம் மற்றும் திருவள்ளுவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 60 வயதை கடந்த திருப்பூர் க.ரா.முத்துச்சாமி, தேனி அய்யா தமிழ்வழி ஈஸ்வர வடிவு லிங்கம் ஆகிய முதியவர்கள்.
இவர்கள் இருவரும் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.
டாஸ்மாக்கை மூடவேண்டும்:
உண்ணாவிரதத்தின் போது தமிழ்பண்பாட்டை சிதைக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூடவேண்டும்.
தமிழுக்கு முன்னுரிமை:
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் அனைத்துத்துறை வேலைவாய்ப்புகளையும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
வழக்காடு மொழியாக தமிழ்:
அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அணு ஆய்வுப் பணிகளை நிறுத்து:
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணி தேர்வுகளை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதஇனம், இயற்கை வளம், சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்த உள்ள நியூட்ரினோ அணு ஆய்வுப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உடன்பாடு ஏற்படவில்லை:
உண்ணாவிரதம் இருந்த 2 பேரிடமும் தேனி தாசில்தார் ராம்ஜி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் நேற்றும் போராட்டம் நீடித்தது. பின்னர் டி.எஸ்.பி சீமைச்சாமி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
60 வயது போராட்டம்:
தொடர்ந்து 2 ஆவது நாளாக போராட்டம் நீடித்தது. சுமார் 60 வயதை கடந்த நிலையில், 2 பேரும் நடத்தும் உண்ணாவிரதப்போராட்டம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.