“அஸ்கா” சர்க்கரை கலப்படம் செய்த இரண்டு சுகர் பேக்டரிகளுக்கு “சீல்”
நாமக்கல்: நாமக்கல்லில் ரசாயன அஸ்கா சர்க்கரை கலந்து அச்சு வெல்லம் தயாரித்த இரு ஆலைகளுக்கு "சீல்" வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கரும்பில் இருந்து பால் எடுத்து வெல்லம் காய்ச்சும் ஆலைகளில், ரசாயன பொருள்கள் மற்றும் கரும்பு பாலுடன் அஸ்கா சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தி வெல்லம் தயார் செய்யக்கூடாது என நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் வெல்லம் காய்ச்சும் ஆலைகளுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரையை ஒரு கிலோ 35 ரூபாய் என்ற விலையில் வாங்கிக்கொண்டுவந்து, அதைக்கலந்து நாட்டு வெல்லம் தயாரித்து அதை விற்பனை செய்யும் போது கிலோ ரூபாய் 55 என்ற விலைக்கு விற்பனை செய்யும் போது, ஆலை உரிமையாளர்களுக்கு இரு மடங்கு இலாபம் கிடைப்பதால் பெரும்பாலான ஆலைகளில் இந்த கலப்படம் நடந்து வந்தது.
இதனால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி உத்தரவின் பேரின் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் காவேரி ஆற்றின் ஓரத்தில் உள்ள வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பரமத்தி வேலூர் வட்டம் பிலிக்கல்பாளையம் அருகே சின்னாகவுண்டம்பாளையம் கணேசன், சின்னமருதூர் சாலையில் உள்ள வடிவேல்குமார் ஆகிய இருவரின் வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் கரும்பு பால் காய்ச்சும் போது அதில் அஸ்க்கா சர்க்கரை கலப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்ல மாதிரிகளை சேலம் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு சோதனைக்காக எடுத்துச் சென்றனர். உடனடியாக இரண்டு ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. வெல்லத்தில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 14 மூட்டை சர்க்கரை, 103 மூட்டை அச்சு வெல்லத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.