பிரெஞ்ச் நாயகனான உலகநாயகன் கமல்...
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியர் விருது' வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
செவாலியர் விருது என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது. செவாலியர் என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற பொருளாகும்
தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமையை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற உன்னத கலைஞர் கமல்ஹாசன்.
•களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ,ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை.
•இன்று ஒரு தயாரிப்பாளராக ,இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக ,பாடலாசிரியராக, பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன் கமல்ஹாசன்.
•தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல ,வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்களும் கூட ஒத்துக்கொள்வார்கள்.
•இந்திய விருதுகளை கடந்த கமல்ஹாசனுக்கு தற்போது சர்வதேச அளவில் விருதுகள் குவிந்து வருகின்றன.
•கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திரைத்துறையில் உலகநாயகன் கமல்ஹாசன் ஆற்றிய பங்கினை கவுரவித்து பிரான்ஸ் அரசு 'லாங்லாய்ஸ் விருது' வழங்கியது.
• பிரெஞ்சு சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹென்றி லாங்லாய்ஸ், திரைப்படங்களை ஆவணப்படுத்தி பாதுகாத்து வைப்பதன் முன்னோடியாக திகழ்ந்தவர். அவரின் நினைவாக வழங்கப்படும் 'லாங்லாய் விருது' கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
•தற்போது மீண்டும் ஒரு கவுரமாக பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சகம் திரைப்படத் துறையில் கமல்ஹாசனின் சாதனைகளை கவுரவித்து செவாலியர் விருதினை அறிவித்துள்ளது.
•இதற்காக சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு கமல்ஹாசனுக்கு விருது வழங்கப்படும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
• பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் செவாலியர் விருது அறிவிக்கப்படுகிறது.
•கலைத்துறையில் சிறந்த சேவையைப் பாராட்டி 1995ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
•அஞ்சலி கோபாலன் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண். திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
•சிவாஜியின் கலை உலக வாரிசான கமல் செவாலியர் பெறப்போவது தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!