இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு
இந்திய அமெரிக்க மற்றும் ஜப்பான் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
சென்னை: இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் கப்பல் படையினரின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. வங்கக்கடலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி கடந்த 10 நாட்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
'மலபார்' கூட்டுப்பயிற்சியை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படையினர் இணைந்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வங்கக் கடல் , அரபிக்கடல் பகுதிகளில் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்தாண்டுக்கான கூட்டுப் பயிற்சி கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்து, நிறைவடைந்துள்ளது.
கடலின் நடுவே, விமானம் தாங்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக போர் விமானங்கள் வானில் பறந்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சி காட்சிகள் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
தமிழ், இந்தி மற்றும் ஆங்கில ஊடகத்தினர் கடல் படைகளின் பயிற்சியை படம் பிடிக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். மேலும் பல முக்கிய அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரும் கப்பல்களில் அமர்ந்தவாறு பயிற்சியை பார்வையிட்டனர்.
இந்திய அதிநவீன கப்பல்கள்
பயிற்சியில், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அனைத்தும் கலந்துகொண்டன. ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, ஐ.என்.எஸ். ரன்விஜய், ஐ.என்.எஸ். ஷிவாலிக், ஐ.என்.எஸ். சயாத்திரி, ஐ.என்.எஸ். ஜோதி, ஐ.என்.எஸ். கமோட்டா, ஐ.என்.எஸ். கிர்பான் கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்றன.
அமெரிக்க கப்பல்கள் பங்கேற்பு
அதே போல, உலகிலேயே மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் , ஏவுகணைகளை வழிநடத்தும் கப்பல் யு.எஸ்.எஸ். பிரின்ஸ்டன், ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் கப்பல் யு.எஸ்.எஸ். ஹோவர்ட் , யு.எஸ்.எஸ். ஷூப் , யு.எஸ்.எஸ். கிட் மற்றும் விரைவாக செல்லும் லாஸ் ஏஞ்சல்ஸ் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவையும் கடல் பயிற்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஜப்பானின் அதிநவீன கப்பல்
மேலும், ஜப்பான் நாட்டின் ' சுய பாதுகாப்பு படை' கப்பல் ஜெ.எஸ்.இஜிமோ, ஜெ.எஸ்.சஜாநமி ஆகிய கப்பல்களும் பயிற்சியில் அணி வகுத்திருந்தன. ஒவ்வொரு கப்பலிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று நாட்டு அதிகாரிகள் பேட்டி
இதுகுறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை அதிகாரிகள் கூட்டாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 'மலபார் கூட்டுப் கடற்படை பயிற்சி' எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இந்த பயிற்சியை நாங்கள் செய்கிறோம்.
நவீன ஆயுத தொழில் நுட்ப அறிவு
கடற்படையில் உள்ள சவால்களை வெற்றி கொள்ள தேவையான நவீன தொழில்நுட்ப அறிவை இந்தப் பயிற்சியின் மூலம், நாங்கள் பகிர்ந்து கொண்டோம். மிக முக்கியமாக இந்தோ-ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு இந்த பயிற்சி நிச்சயம் உதவும்." என்று தெரிவித்தனர்.