இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராடிய வைகோ, வெள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய வைகோ, வெள்ளையன் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜெனிவாவில், மார்ச் 22ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வதேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்திவருகிறது. இதைக் கண்டித்து, வைகோ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மதிமுகவினர் ஆர்பாட்டம்
நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ம.தி.மு.க.வினர் இன்று முற்றுகையிட போவதாக வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகோ தலைமை
இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் கலந்து கொண்டு முழக்கமிட்டார்.

வெள்ளையன் பேச்சு
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது. இலங்கைக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா செயல்படுகிறது. ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க கூடாது. ஐ.நா.வில் இலங்கையின் தீர்மானம் நிறைவேறினால் மனித உரிமை கவுன்சில் நீதி குழி தோண்டி புதைக்கப்படும் என்று வெள்ளையன் தெரிவித்தார்.

எதிராக வாக்களிக்க வலியுறுத்தல்
ஆர்பாட்டத்தில் பேசிய வைகோ, 'ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

வைகோ, வெள்ளையன் கைது
இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.கவினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். வெள்ளையன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தேவராஜ், சினிமா இயக்குனர் புகழேந்தி உள்பட ஏராளமானோர் கைதானார்கள். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications