விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது... வைகோ
திருநெல்வேலி: விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காத காரணத்தால் உலக அளவில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை; அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி பாளையங்கோட்டையில் 3 தினங்கள் நடைபெறுகிறது.
மே9ம் தேதி வெள்ளிக்கிழமை இப்போட்டியை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரி நினைவு கைப்பந்தாட்டக் கழக தலைவருமான வைகோ தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இந்தியா ஜொலிக்க வேண்டும்
விளையாட்டு வீரர்கள் முறையாக ஊக்குவிக்கப்படுவதில்லை. அதனால்தான், விளையாட்டில் உலகளவில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை.
விளையாட்டுக்கு முன்னுரிமை
அரசியலுக்கு அப்பாற்பட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரிகளில் முன்னுரிமை அளித்து இடம் அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
சமூக நல்லிணக்கம் உருவாகும்
தாலுகா, மாவட்ட அளவில் விளையாடும் வீரர்களை மாநில, தேசியப் போட்டிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும். திறமையான வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டின் மூலம் ஒற்றுமை, சமூக நல்லிண்ணக்கம் உருவாகும். சாதிய உணர்வுகள் மேலோங்காது. உடல் ஆரோக்கியம் கிடைக்கும். கிராம அளவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் உலக அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்றார் அவர்.பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முன்னாள் உடற்கல்வி இயக்குநர் பெனடிக்ட் முன்னிலை வகித்தார்.
சாயர்புரம் அணி
நாக்அவுட் முறையில் நடைபெற்ற முதல் போட்டியில் சாயர்புரம் வெல்டன் கிளப் அணியும், படர்ந்தபுளி லிவா கிளப் அணியும் விளையாடின. இதில் சாயர்புரம் அணி வென்றது.
சாத்தான்குளம் அணி
இதையடுத்து, சாத்தான்குளம் அணியும், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழக பி அணியும் விளையாடின. இதில் சாத்தான்குளம் அணி வென்றது.
உற்சாக விளையாட்டு
இதையடுத்து நடைபெற்ற லீக் போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளி, தருவைகுளம் புனித மிக்கேல் கிளப் அணி, திருநெல்வேலி சாரா அகாதெமி அணி, பெல் மார்க்கெட்டிங் கிளப் அணி ஆகிய அணிகள் விளையாடின.
மதிமுகவினர் பங்கேற்பு
நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் சத்யமூர்த்தி, குருசாமி, மாவட்ட மதிமுக செயலர் ப.ஆ. சரவணன், மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள், தூத்துக்குடி மாவட்டச் செயலர் எஸ். ஜோயல், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது, வைகோ மனைவி ரேணுகாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
வைகோ வாலிபால்
சனிக்கிழமை கலிங்கப்பட்டி கைப்பாந்தாட்டக் கழக அணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் விளையாடுகின்றன. இதில், கலிங்கப்பட்டி அணியில் வைகோவும் பங்கேற்று விளையாடுகிறார்.
ரூ.25ஆயிரம் ரொக்கப் பரிசு
வாலிபால் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், 2 ஆவது பரிசாக ரூ. 15 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 11 ஆம் தேதி நிறைவு விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அமைப்பின் தலைவர் வைகோ விருது வழங்கி பாராட்டுகிறார்.